Friday, May 6, 2022

ஆளுநர் ரவியா ? ஆர்.எஸ்.எஸ் ரவியா ? தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்


இறைவனின் திருப்பெயரால்...

கண்டன அறிக்கை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்……..


ஆளுநர் ரவியா ? ஆர்.எஸ்.எஸ் ரவியா ? தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்



சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு புத்தக வெளியிட்டு விழாவில தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு, இதில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார்.  இது ஜனநாயகத்தை விரும்பும் எவரும் ஏற்றுக் கொள்ள முடியாத பேச்சு.


ஆர்.எஸ்.எஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகள் சொல்லும் கொள்கைகளை ஒரு ஆளுநர் பொது மேடையில் பேசுவது இந்திய மத சார்பின்மையை குழி தோண்டி புதைக்கும் செயலாகும். 


பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம் என்றும் மனித உரிமை அமைப்பு, மாணவர் அமைப்பு, அரசியல் கட்சி என்று பல முகமூடிகளை பயன்படுத்துகிறார்கள் என்றும் பேசியுள்ளார். 


மத வெறி அரசியலை தமிழகத்தில் புகுத்த பாஜக வினரால் கொண்டு வரப்பட்டவர் ஆர்.என்.ரவி என்பதை உலகம் அறியும்.  இவரின் தமிழக மக்கள் விரோத போக்கை கண்டித்து இவர் அகற்ற பட வேண்டும் என்று பாராளுமன்றத்திலேயே குரல்கள் எழுந்து வருகின்றது.


அரசியல் இலாபத்திற்காக வன்முறையைத் தூண்டுபவர்கள் அனைவரும் பயங்கரவாதிகளே. அரசியல் இலாபத்துக்காக வன்முறையைத் தூண்டுவதை ஏற்க முடியாது. பயங்கரவாதத்தில் ஈடுபட்டால், அதற்கான பதிலடியை அவர்கள் பெறுவார்கள்" என்று கூறியுள்ளார். 


இந்த செயல்பாடுகள் அனைத்தும் அவரை ஆளுநர் பொறுப்பில் அமர வைத்த பாஜக விற்கு முழு பொறுத்தமான வார்த்தைகள்.  அவர்கள் தான் அரசியல் இலாபத்திற்காக மத சார்பற்ற இந்தியாவில் மத வெறியை தூண்டி அதன் மூலம் இலாபம் அடைய நினைப்பவர்கள்.


அவர்களின் செயல்பாடுகள் அனைத்தும் மத வெறி அரசியல் என்பதற்கு எடுத்து காட்டாக விளங்குபவை.

1. சிஏஏ எனும் கருப்பு சட்டம்

2. முத்தலாக் தடை மசோதா

3. பாபர் மசூதி

4. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்து நீக்கம்

5. ஹிஜாப்

6. ஹலால் உணவு

7. பள்ளிவாசலின் பாங்கு 

8. மத மோதலை ஏற்படுத்தும் ஊர்வலங்கள்

9. ஜெய் சீராம் சொல்ல சொல்லி தாக்குதல்

10. பசுவின் பெயரால் நடந்த வன்முறைகள்


ஏன்று இவர் சார்ந்தவர்கள் பட்டியல் போட முடியாத அளவிற்கு வன்முறைகளிலும், கலவரங்களிலும் ஈடுபட்டுள்ளனர். பஜ்ரங்தள், விஸ்வ இந்து பரிஷத், ஆர்.எஸ்.ஏஸ் போன்ற தீவிரவாத செயலில் ஈடுபடும் அமைப்புகளை தடை செய்ய சொல்லாமல் தமிழகத்தில் செயல்படும் முஸ்லிம்  அமைப்பை  குறி வைத்து முக்கிய பொறுப்பில் உள்ள ஆளுநர் பேசுவது  ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.


நாகாலாந்து ஆளுநராக பதவி வகித்த போது இவரின் நிர்வாகத்தின் மீது மக்கள் அளவு கடந்த வெறுப்பை வெளிபடுத்தி வந்தனர். நாகாலாந்து ஆளுநர் பொறுப்பு நீக்கப்பட்ட நேரத்தில் நாகாலாந்து மக்கள் அதை கொண்டாட்டமாக கொண்டாடினர்.


இவர் தமிழகத்தில் மத மோதலை ஏற்படுத்தும் சக்தியாக செயல்படுகிறார். இவர் உடனடியாக தமிழகத்தில் இருந்தும் அகற்றபட வேண்டும் எனவும், ஜனநாயக சக்திகள் ஒருங்கினைந்து குரல் எழுப்ப வேண்டும் எனவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கேட்டு கொள்கிறோம்.



இப்படிக்கு.

ஆர்.  அப்துல் கரீம்,

பொதுச் செயலாளர்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

Thursday, April 14, 2022

பீஸ்ட் திரைப்படம் தடை செய்ய வேண்டும். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை.

சுற்றறிக்கை: 42/2022


தேதி: 14/04/2022


இறைவனின் திருப்பெயரால்….


பீஸ்ட் திரைப்படம் தடை செய்ய வேண்டும். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை.


பீஸ்ட் திரைப்படம் பார்த்து விட்டு வெளியே வரும் மக்களிடம் கருத்து கணிப்பு எடுக்கபடுகிறது. அனைத்து மனித நேய பணிகளை செய்யும் முஸ்லிம்களை திரும்ப, திரும்ப தீவிரவாதிகளாக சித்தரிப்பது முகம் சுலிக்க கூடிய வகையில் உள்ளதாக பொது மக்கள் கருத்துக்களை கூறியுள்ளனர். 


மக்களை மடையர்களாக ஆக்கும் இந்த சினிமாக்களை சமூக சிந்தனை உள்ளவர்கள் பார்ப்பது இல்லை என்றாலும், முழுக்க, முழுக்க முஸ்லிம்களை திவிரவாதிகளாக சித்தரித்து இந்த படம் எடுக்கபட்டுள்ளது என்று அவர்களும் பேசி வருகின்றனர்.


மணிரத்தினம், விஜயகாந்த், அர்ஜூன், கமலஹாஸன் போன்றவர்கள் ஓய்வு பெற்று, முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் பழக்கம் முடிவிற்கு வந்து விட்ட நிலையில் அதை மீண்டும் தூசி தட்டும் வேலையில் விஜய் இறங்கியிருக்கிறார்.


கடந்த காலங்களிலும் கூட விஜய் நடித்து வெளிவந்த துப்பாக்கி படத்தில் முஸ்லிம்கள் ஸ்லிப்பர் செல்களாக ஒவ்வொரு கடைத் தெருவிலும் ஊடுருவி இருக்கிறார்கள் என்ற விஷ விதையை தூவி விட்டார்.


பீஸ்ட் படத்தில் விஜய் ஆப்கானிஸ்தான் சென்று மக்களை மீட்டு வருவதாக சில தகவல்கள் சொல்கின்றனர். உக்ரைனுக்கு இவரை அனுப்பி இருக்கலாமே என்றும் கோரிக்கையும் வைக்க ஆரம்பித்துள்ளனர். 


காவிக் கொடியை கிழித்து டிரைலர் வந்த போது சங்பரிவாரங்கள் ஏன் எதிர்க்கவில்லை என்று விளங்கி கொள்ளும் வகையில் இந்த படம் அமைந்துள்ளதாகவும், மோடி இதற்கு விளம்பரம் செய்வார் என்று சொல்லும் அளவிற்கு முஸ்லிம் விரோத போக்குடன் இந்த படம் எடுக்கபட்டுள்ளது.  


நிஜ வாழ்வில் எந்த சமூக பணிகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளாதவர் இந்த விஜய். அரசை எமாற்ற, வரி ஏய்ப்பு செய்ய அறக்கட்டளை மூலமாக மட்டும் சில உதவிகள் செய்பவர். சினிமாவில் மட்டும் கதைக்கு ஏற்றவாறு மக்களின் மீது அக்கறை உள்ளவர் போன்று கூலி வாங்கி நடித்து கொண்டு இருக்கிறார்.


சமூகத்தில் நடக்கும் அனைத்து துயரங்களிலும், மக்களுக்கு உதவ களத்தில் இருப்பவர்கள் முஸ்லிம்கள். களத்திற்கு வந்திருந்தால் இதை அவர் சந்தித்து இருப்பார்.


உணவு அளிப்பதிலும், இரத்த தான உதவி செய்வதிலும், ஏழைகளுக்கு உதவுவதிலும், கல்வி பணியாற்றுவதிலும், ஆம்புலன்ஸ் உதவி செய்வதிலும், பேரிடர் காலங்களில் உடனே களத்திற்கு வருவதிலும் முன்னோடியாக முஸ்லிம்கள் உள்ளனர்.


முஸ்லிம்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் புண் படுத்தும் காரியங்களை தொடர்ந்து விஜய் செய்து வருகிறார்.


முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் போக்கை விஜய் உடனே மாற்றி கொள்ள வேண்டும். இந்த படத்தை குவைத் போன்ற நாடுகள் தடை விதித்து உள்ளது. 


வன்முறை காட்சிகள் அதிகம் இடம் பெற்றுள்ள, இளைஞர்கள் மத்தியில் தீவிரவாத சிந்தனையை ஊட்டும், இந்த படத்தை தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கேட்டு கொள்கிறோம்.



இப்படிக்கு, 

ஆர். அப்துல்கரீம்,

பொதுச்செயலாளர்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

Monday, April 11, 2022

ராம நவமி ஊர்வலத்தில் கலவரம் – கண்டு கொள்ளாத அரசுகள் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்.


தேதி: 11/04/2022


இறைவனின் திருப்பெயரால்….


ராம நவமி ஊர்வலத்தில் கலவரம் – கண்டு கொள்ளாத அரசுகள் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்.


ராம நவமி ஊர்வலத்தின் போது மத்தியப்பிரதேசம், குஜராத், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் ஆகிய நான்கு மாநிலங்களில் கலவரம் நடந்துள்ளது. 


மத்திய பிரதேசத்தில்  20க்கும் மேற்பட்ட வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபட்ட 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதம் இருப்பவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 


குஜராத் மாநிலத்தில் ஆனந்த் மாவட்டத்தில் கம்பத், சபர்கந்த் மாவட்டங்களில் ராம நவமி ஊர்வலங்களில் கல்வீச்சு சம்பவங்கள், தீ வைப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. மோதலில் ஈடுபட்டவர்களை போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசிக் கலைத்துள்ளனர்.


ஜார்க்கண்ட் மாநிலம் லோஹர்டகா பகுதியில் ராம நவமி ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 3 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். லோஹர்டக் பகுதி முழுமையும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.


மேற்கு வங்கத்தில் ஹவுரா மாவட்டத்தில் சிவ்பூர் பகுதியில் மோதல் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர். போலீசார் அங்குக் குவிக்கப்பட்டு பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.


மத்தியப் பிரதேசம் கர்கோன் மாவட்ட கலெக்டர் அனுகிரஹா செய்தி யாளர்களிடம் கூறும் போது கார்கோன் பகுதியில் இரண்டு நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எட்டாம் வகுப்பு முதல் இளங்கலை மற்றும் முதுகலை தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.


இது திட்டமிடப் பட்ட கலவரம் தான் என்பதை நிகழ்வுகளை வைத்து புரிந்து கொள்ள முடிகிறது. தீவைத்தல், கல்லெறிதல், ஆயுதங்களை கொண்டு தாக்குவது என்பது திடிரென்று ஏற்படுவதில்லை.


இந்த ஊர்வலங்களுக்கு முன்பே இப்படி நடக்க உள்ளதை மாநில அரசுகள் கணித்து இது குறித்து உடனடியாக தக்க நடவடிக்கை எடுத்து இருந்தால் இது போன்ற கலவரங்கள் தவிர்த்திருக்கலாம்.சில உயிரிழப்புகளும் தவிர்க்கப் பட்டிருக்கும்.


முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தவறிய மாநில அரசுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது. வழக்கை முடிக்க அப்பாவிகள் மீது குற்றம் சுமத்தி விடாமல், இந்த கலவரத்திற்கு காரணமாக இருந்த உண்மைக் குற்றவாளிகளை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கேட்டு கொள்கிறோம்.



இப்படிக்கு, 


ஆர். அப்துல்கரீம்,


பொதுச்செயலாளர்,


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

Saturday, April 9, 2022

09.04.2022 அன்று நடந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

 

அல்லாஹ்வின்  திருப்பெயரால்….

09.04.2022 அன்று நடந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. ஹிஜாப் குறித்த அநியாயத் தீர்ப்பு .

பள்ளி கல்லூரிகளில் ஹிஜாப் அணிய கர்நாடகா பாஜக அரசு தடை விதித்தது. இதை கண்டித்து தொடரப்பட்ட வழக்கில் அரசு தடை விதித்தது சரி என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அரசியல் சாசனத்தையும்,  இஸ்லாத்தில் ஹிஜாப் குறித்து சொல்லப்பட்ட நெறிமுறைகளயும் புறந்தள்ளிவிட்டு மனம் போன போக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம்  ஹிஜாப் குறித்த (அநியாய) தீர்ப்பை வழங்கி உள்ளது.
இந்த அநியாய தீர்ப்பு இந்திய ஜனநாயகத்தை விரும்பக்கூடியவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த தீர்ப்பில் உள்ள சட்டத்திற்கு புறம்பான அம்சங்களையும், ஜனநாயக விரோத தன்மையையும் உலகம் முழுவதும் உள்ள ஜனநாயகத்தையும், சமூக நல்லிணக்கத்தையும் விரும்பக்கூடிய கோடிக்கணக்கான உள்ளங்களில் கொண்டு சேர்க்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது.
பாசிச பாஜக கொண்டு வரும் இது போன்ற அடக்குமுறைகளை கண்டு இஸ்லாமிய சமுதாயம் அஞ்சாது என்பதையும், சட்டத்தின் மூலம் இவைகளை முறியடிப்போம் என்பதையும் இம்மாநில செயற்குழு வாயிலாக தெரிவித்து கொள்கிறோம்.

2. மத வெறுப்பை உமிழும் கர்நாடக அரசு

ஹிஜாப் விவகாரத்தை தொடர்ந்து முஸ்லிம் வியாபாரிகள் கோயில் திருவிழாக்களில் கடை போடக்கூடாது என்று சொல்வதும்,  இறைச்சி கடைகளில் ஹலால் இறைச்சி வைக்க கூடாது என்று வன்முறை ஏற்படுத்துவதும், பள்ளிவாசலில் ஒலி பெருக்கி மூலம் பாங்கு சொல்லக்கூடாது என்று சொல்வதும்,

தொடர்ந்து மதத்தின் பெயரால் அத்துமீறல் செய்து வரும் கர்நாடக மாநில பாசிச பாஜக அரசை இம்மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கின்றது.

3. அல் காய்தாவிற்கு கண்டனம்

இந்திய முஸ்லிம்கள் விஷயத்தில் அல் காய்தா தலையிடுவதாக ஒரு செய்தி பரவுகிறது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இந்திய முஸ்லிம்கள் விஷயத்தில் அல் காய்தா தலையிடுவதை ஒரு போதும் ஏற்க முடியாது. இச்செயலை தவ்ஹீத் ஜமா அத்  வன்மையாக கண்டிக்கிறது.

4. பொது சிவில் சட்டம்

உத்தரகாண்ட்  மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் தாமி அறிவித்துள்ளார், இது இந்தியாவின் மதசார்பற்ற தன்மைக்கும், அரசியல் சாசன சட்டத்திற்கும் எதிரானது. ஜனநாயகத்தை இது முற்றிலுமாக உருக்குலைத்து விடும். இதனால் உலக அரங்கில் இந்தியா தலைகுனிவை சந்திக்க நேரிடும்.
எனவே இதை உத்தரகாண்ட் அரசாங்கம் உடனே திரும்பி பெற வேண்டும் என்று இம் மாநில செயற்குழு வாயிலாக கேட்டு கொள்கிறோம்.

5. பித்அத் ஒழிப்பு மாநாடு

இன்ஷா அல்லாஹ் 2023 பிப்ரவரி 5 ம் தேதி பித்அத் ஒழிப்பு மாநாடு  நடைபெற உள்ளது.
இறைத்தூதரின் போதனைகளை முஸ்லிம்கள் புறக்கணித்து வாழ்ந்து வருகின்றனர்.முஸ்லிம்களிடம் மண்டிக் கிடக்கும் அனாச்சாரங்களையும்,   மார்க்கத்தின் பெயரால் உருவாக்கப்பட்ட புதுமைகளையும் முழுமையாக கலைந்திட நம்முடைய பிரச்சாரக் களத்தை வீரியப்படுத்த வேண்டும்.
இந்த மாநாட்டை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் பட்டி தொட்டி எங்கும் இந்த பிரச்சாரத்தை  வீரியமாக கொண்டு செல்ல இச்செயற்குழு வாயிலாக உறுதி ஏற்போம்.

6. முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள், கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்வேன் என்று சொன்னார்.
அண்ணாவின் 113ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நீண்டகாலம் சிறையில் வாடும் 700 ஆயுள் தண்டனை கைதிகளை மனிதநேய அடிப்படையில் முன் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அறிவித்து வெளிவந்த அரசாணையில் முஸ்லிம்கள் விடுதலை கேள்விக்குறியானதை தொடர்ந்து, நீதிபதி ஆதிநாதன் தலைமையில் காலம் நிர்ணயிக்கப் படாமல் கமிஷன் ஒன்று அமைக்கபட்டது.முஸ்லிம் சமுதாயம் நீதிபதி ஆதிநாதன் கமிஷன் அறிக்கையை எதிர்பார்த்து காத்துக் கிடக்கிறது. நீதிபதி ஆதிநாதன் அவர்களின் அறிக்கையிலும் முஸ்லிம்கள் விடுதலையில் மத ரீதியான பாரபட்சம் தொடர்ந்தால், தமிழகமே கண்டிராத மக்கள் திரள் ஆர்பாட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முன்நின்று நடத்தும் என்பதை இம்மாநில செயற்குழு வாயிலாக தெரிவித்து கொள்கிறோம்.

7. இராஜஸ்தானில் வன்முறை

இராஜஸ்தான் மாநிலத்தின்  கரோலி என்ற பகுதியில் ஹிந்து சேனா என்கிற இந்துத்துவ அமைப்பு முஸ்லிம்களின் குடியிருப்புகளுக்குள் நுழைந்து பின்பு ஏற்பட்ட வன்முறையின் விளைவாக  காவல்துறையினரின் துணையோடு இந்துத்துவ வெறியர்கள் 40க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களின் வீடுகளுக்கு தீ வைத்துள்ளனர்.

பல வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. கொடுங் காயங்கள் ஏற்பட்டு பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்துத்துவ வகையறாக்களின்   இந்த தேசவிரோதச் செயலை  இம்மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குவதுடன் வன்முறை வெறியாட்டம் ஆடிய கயவர்களை கைது செய்து சிறைக் கொட்டத்தில் அடைத்து அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டும் படி ஆளும் காங்கிரஸ் அரசை இம்மாநில செயற்குழு கேட்டுக்கொள்கின்றது.

8. தமிழகத்தில் இட ஒதுக்கீடு

கடந்த ஆட்சி காலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 3.5 தனி இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தித் தருவேன் என்று ஜெயலலிதா வாக்களித்தார்.  அவர் வாழும் காலம் வரை அதற்கான எந்த முன்னெடுப்பையும் அவர் செய்யவில்லை. அவரின் மறைவிற்கு பிறகு அதிமுகவினர் பாஜகவின் அடிமைகளாக மாறி விட்டனர்
சிறுபான்மையினரான முஸ்லிம்களின்  இட ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே தமிழக அரசு நிறைவேற்றாமல் இருந்து வருகிறது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் சிறுபான்மை சமுதாயத்தின் மொத்த வாக்குகளையும் பெற்று ஆட்சி பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் மு..க.ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 3.5% இடஒதுக்கீட்டை 7% ஆக அதிகரித்து முஸ்லிம்களுக்கு அளிக்க வேண்டும் என்று இம்மாநில செயற்குழு வாயிலாக தெரிவித்து கொள்கிறோம்.

9. வெள்ளை அறிக்கை

இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு என்பது இன்று வரை முழுமையாக பல துறைகளில் கொடுக்கப்படவில்லை.  சுதந்திரத்திற்கு முன்னர் இஸ்லாமியர்களுக்கென்று தனி இட ஒதுக்கீடு சென்னை மாகாணத்தில் இருந்து வந்த நிலை மாறி இன்று தங்கள் சதவீதத்திற்கும் மிகக்குறைவாகவே ஒவ்வொரு அரசுத்துறையிலும், அதிகாரத்திலும் இஸ்லாமியர்கள் உள்ளனர். கல்வி , வேலைவாய்ப்பு, உள்ளாட்சி அமைப்புகள் என ஒவ்வொன்றிலும் இஸ்லாமியர்கள் பெற்றுள்ள இடம் என்ன என்பதை அறியும் வகையில் தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று இம்மாநில செயற்குழு வாயிலாக கேட்டுக் கொள்கிறோம்.

10. புதுவையில் இட ஒதுக்கீடு

பாண்டிச்சேரி மாநிலத்தில் இஸ்லாமியர்களுக்கு 6.1 சதவீத விழுக்காடு இடஒதுக்கீட்டு கோரிக்கை நீண்ட நாட்களாக நிறைவேற்ற படாமல் உள்ளது.  உடனடியாக அதை நிறைவேற்றி தரும்படி பாண்டிச்சேரி அரசை இம்மாநில செயற்குழு கேட்டுக் கொள்கின்றது.

11. சி.ஏ.ஏ

இந்திய நாட்டை உருவாக்குவதற்கும் , இந்திய  நாடு சுதந்திரம் பெறுவதற்கும் இஸ்லாமியர்கள் ஆற்றிய பங்கு மகத்தானது. அத்தகைய இஸ்லாமியர்களை நாட்டை விட்டு அந்நியப்படுத்தும் தீய நோக்கில் ஒன்றிய பாசிச பாஜக அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டுவந்தது. இதை இந்தியர்கள் யாருமே ஏற்கவில்லை. ஆளும் ஒன்றிய பாசிச பாஜக அரசு இச்சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்.
இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசு முயன்றால் இச்சட்டத்திற்கு எதிராக தேசம் தழுவிய பலகட்ட போராட்டங்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முன்னின்று நடத்தும் என்பதை இம்மாநில செயற்குழு வாயிலாக தெரிவித்து கொள்கிறோம்.

இப்படிக்கு. 

ஆர்.  அப்துல்கரீம்.

பொதுச்செயலாளர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

Saturday, March 19, 2022

பாரபட்சமான கைது நடவடிக்கைகளை சட்ட ரீதியாக எதிர் கொள்வோம்.

 ஏக இறைவனின் திருப்பெயரால்....


சுற்றறிக்கை : 33/2022

தேதி - 20.03.2022

அஸ்ஸலாமு  அலைக்கும் வரஹ்...


பாரபட்சமான கைது நடவடிக்கைகளை சட்ட ரீதியாக எதிர் கொள்வோம்.


ஹிஜாப் வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கிய சட்டத்திற்கு புறம்பான, அநியாய தீர்ப்பை எதிர்த்து தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய போராட்டங்களில் பங்கேற்று பேசிய சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


தவ்ஹீத் ஜமாஅத்தின் பேச்சாளர்களான ஜமால் உஸ்மானி, மற்றும் கோவை ரஹ்மத்துல்லாஹ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.


கோவை ரஹ்மத்துல்லாஹ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து தேடப்படும் குற்றவாளி என்பது போல சித்தரித்த காரணத்தால் தான் தேடப்படும் நிலையில் இல்லை. நானே நேரில் வந்து கைதாகிறேன் என்று கைதாகியுள்ளார்.


அமைதி வழியில் போராடும் நபர்கள் மீது கடுமையான வழக்கு தொடுப்பதும் கைது நடவடிக்கையை மேற்கொள்வதும் ஜனநாயகத்தின் குரலை நெறிக்கும் செயலாகும். 


வன்முறைப்பேச்சை எப்போதும் தவ்ஹீத் ஜமாஅத் ஆதரிப்பதில்லை.


பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் சாலை மறியலில் கூட தவ்ஹீத் ஜமாஅத் ஈடுபடுவதில்லை.


குறிப்பிட்ட பேச்சு தவறாக புரிந்து கொள்ளும் படி அமைந்து விட்டது. எனினும் சங்பரிவார கும்பல் இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு மத வெறுப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.


சங்பரிவார கும்பல்களின் அரசியல் அழுத்தத்திற்கேற்ப அரசின் புறத்திலிருந்து இத்தகைய கைது நடடிவக்கைகள் ஏற்புடையதல்ல.


இது முஸ்லிம்களிடம் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும் என்பதை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.


இந்தியாவில் நீண்ட காலம் தடை செய்யப்பட்டிருந்த ஆர்.எஸ்.எஸ் இயக்க ஆதரவாளர்கள் தவ்ஹீத் ஜமாத்ததை குற்றம் சொல்லி  குரலெழுப்புவது நகைப்பிற்குரியது.


தவ்ஹீத் ஜமாஅத்தின் மனிதநேய பணிகள், இரத்த தானம், பேரிடர் கால பொதுச் சேவைகள் உள்ளிட்டவை மக்கள் அறிந்ததே.


ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்பரிவார கும்பல்களின் இரத்தக்கறை படிந்த வரலாற்றையும் மக்கள் அறிவார்கள்.


லாவண்யா மரணத்தை வைத்து தமிழகத்தில் அவர்கள் நகர்த்திய அரசியலை மக்கள் புரிந்து கொண்டதால் தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் ஆர்ப்பாட்டத்தை வைத்து கேவலமான அரசியல் செய்யும் பாஜகவின் தந்திரம் தமிழகத்தில் பலிக்கப்போவதில்லை.


நீதிமன்றத்தை கொச்சை வார்த்தையில் விமர்சித்த எச்.ராஜா, மற்றவர்களின் காலைப் பிடித்து தான் நீதிபதிகள் உயர் பொறுப்புகளுக்கு வருகிறார்கள் என்று பேசிய துக்ளக் குருமூர்த்தி, பெண் பத்திரிக்கையாளர்களை ஆபாச வார்த்தையில் பேசிய எஸ்.வி சேகர் போன்றவர்களை போல் வரம்பு மீறிய செயல்களில் நாம் ஈடுபடுவதில்லை.


தமிழக பாஜக தலைவர்கள் இந்த பிரச்சனையை கையிலெடுத்து பரபரப்பு தேடுவதிலிருந்து அவர்களுக்கு இங்கு வேறு அரசியல் இல்லை என்பதை காட்டுகிறது.


இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிராகவும், கோட்சேவிற்கு ஆதரவாகவும் ஈடுபடும் சங்க பரிவாரங்கள் போன்று வெறுப்பு அரசியலில் ஈடுபட வேண்டிய தேவை தவ்ஹீத் ஜமாஅத்திற்கு இல்லை.


கைது நடவடிக்கைகளை கண்டு தவ்ஹீத் ஜமாஅத் ஒருபோதும் அஞ்சாது. சட்டத்தின் அடிப்படையில் இந்த பிரச்சனையை எதிர்கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.




இப்படிக்கு,

ஆர். அப்துல் கரீம்,

மாநில பொதுச் செயலாளர்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

Tuesday, March 15, 2022

கர்நாடக நீதிமன்றத்தின் காவிமயத் தீர்ப்பிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்.


இறைவனின் திருப்பெயரால்..

ஹிஜாப் தடை செல்லும்: கர்நாடக நீதிமன்றத்தின் காவிமயத் தீர்ப்பிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்.


ஹிஜாப் தடை செல்லும் என கர்நாடகா நீதிமன்றம் வழங்கிய அநியாயத் தீர்ப்பை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கின்றது.


உலகஅளவில் பரபரப்பாகப் பேசப்பட்ட    ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை  கர்நாடகா உயர்நீதிமன்றம் இன்று (15.03.2022) வெளியிட்டது.


ஏற்கனவே எரிந்து நாசமாகி வரும் இந்தியாவின் மதச்சார்பின்மை மீது ஒரு கேலன் பெட்ரோலை ஊற்றியிருக்கிறது  கர்நாடகா உயர்நீதிமன்றம்.


ஹிஜாப் இஸ்லாத்தில் கட்டாயம் இல்லை எனவும் எனவே ஹிஜாபை முஸ்லிம்களின் அடிப்படை உரிமை என எடுத்துக் கொள்ள முடியாது எனவும் இதனால் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணியத் தடை விதித்தது செல்லும் எனவும்  விஷம் கக்கியிருப்பதுடன் ஹிஜாபுக்கு ஆதரவாக தொடுக்கப்பட்ட சுமார் 140 ரிட் மனுக்களையும் தள்ளுபடி செய்துள்ளது,


ரிதுராஜ் அவஷ்தி, ஜே.எம்.காஷி, கிருஷ்ணா தீர்ஷித் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு தான் இந்த அநியாயத் தீர்ப்பை வழங்கியிருக்கின்றது.  


காவி அணியும் சங்பரிவாரத்தினர் கூறித்திரியும் நச்சுக் கருத்துக்களைத்தான் கருப்புச் சட்டை அணிந்த இந்நீதிபதிகள் தங்கள் வாய்களால் வாந்தி எடுத்துள்ளனர்.


இது ஒரு காவிமயமான தீர்ப்பு என்பதில் எள் முனையளவும் சந்தேகமில்லை. இந்த தீர்ப்பைத் தான் இவர்கள் தரப்போகிறார்கள் என்பது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான். 


இது போன்ற இஸ்லாமியர்களுக்கு எதிரான தீர்ப்புகள் பன்னெடுங்காலமாகவே இந்திய நீதிமன்றங்களால்  சொல்லப்பட்டு வருகிறது.


450 ஆண்டு பழமை வாய்ந்த பாபரி மஸ்ஜித் இடம் இராமருக்கே சொந்தம் என்று ஒரு நீதிபதி அபத்தம் நிறைந்த தீர்ப்பளித்ததும்  , இந்த அநியாயத் தீர்ப்பை உச்சரித்த நீதிபதிக்கு எம்.பி பதவி வழங்கப்பட்டதும் நாம் கேள்விப்பட்டது தானே!


முத்தலாக் பிரச்சனை , குடியுரிமை திருத்தச் சட்டம், வேளாண் திருத்த மசோதா என்ற எந்த அநியாயச் சட்டங்களையும் தடுத்து நிறுத்தாத நீதிபதிகள் வாழும் இந்தியாவில் இது போன்ற தீர்ப்புகள் வருவது ஒன்றும் ஆச்சரியமான விஷயம் அல்ல.


இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயம் என்று திருமறைக் குர்ஆனிலும் நபிகள் நாயகத்தின் போதனைகளிலும் வந்துள்ளது. 


நபியே! தமது தலைமுக்காடுகளைத் தொங்கவிட்டுக் கொள்ளுமாறு உமது மனைவியருக்கும், உமது பெண் மக்களுக்கும், இறைநம்பிக்கையாளர்களின் பெண்களுக்கும் கூறுவீராக!

(அல்குர்ஆன் 33: 59)


நபியின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஆரம்ப கால முஹாஜிர் பெண்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! (நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறுக:) அவர்கள் தமது தலைமுக்காடுகளைத் தமது மேற்சட்டைகளின்மீது போட்டுக் கொள்ளட்டும். ! எனும் திருக்குர்ஆனின் (24:31 ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளிய போது, அவர்கள் தங்கள் கீழ்ஆடை(யில் ஒரு பகுதி)யைக் கிழித்து அதனைத் தலைமுக்காடாக ஆக்கி(மறைத்து)க் கொண்டார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல்  : புகாரி (4758



இவை போன்ற பல செய்திகளில் ஹிஜாப் கட்டாயம் என்பது இஸ்லாத்தில் தெளிவு படுத்தப்பட்டுள்ள நிலையில் 

அது இஸ்லாத்தில் கட்டாயமில்லை என்று இவர்கள் தீர்ப்பு கூறுகிறார்கள் எனில் இந்த நீதிபதிகளின் புத்திக் கூர்மையை என்னவென்று சொல்வது. 


ஆளும் பா.ஜ.க இஸ்லாமியர்களுக்கு இந்தியாவில் எந்த உரிமையும் தரமாட்டோம். அவர்களை இங்கு நிம்மதியாக வாழ விடமாட்டோம் என்பதைத் தான் நீதிமன்றங்கள் மூலம் சொல்ல நினைக்கின்றனர்.


அரசியல் தனமான காவிச்சிந்தனை மிக்க இந்த அநியாயத் தீர்ப்பை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிப்பதுடன் இந்திய முஸ்லிம்கள் இறைவனின் துணை கொண்டு இது போன்ற அநியாயங்களுக்கும் இதை அரங்கேற்றிவரும் காவிகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


இப்படிக்கு. 


ஆர்.  அப்துல் கரீம். 


பொதுச் செயலாளர்.


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

Wednesday, March 9, 2022

பராஅத் இரவு உண்டா

 பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்


பராஅத் இரவு உண்டா? 


ஷஃபான் மாதம் பதினைந்தாம் இரவை ஷபே பராஅத் என்ற பெயரில் சிறப்புமிக்க இரவாகக் கருதி அந்த இரவு முழுவதும் விழித்து நோன்பு நோற்று பல விதமான புது வணக்கங்களை சிலர் செய்து வருகிறார்கள்.


 இந்த இரவு சிறப்புமிக்க இரவு என்பதற்கு கீழே நாம் எடுத்துக்காட்டும் செய்திகளை ஆதாரங்களாக எடுத்துக் காட்டுகின்றனர்.


முதல் ஆதாரம்: தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக!  பாக்கியம் நிறைந்த இரவில் இதை நாம் அருளினோம். நாம் எச்சரிக்கை செய்வோராக இருக்கிறோம். அதில் தான் உறுதி செய்யப்பட்ட ஒவ்வொரு  செயல்திட்டமும் பிரிக்கப்படுகின்றது.


 திருக்குர்ஆன் 44:2-4


இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள பாக்கியமுள்ள இரவு பராஅத் இரவு தான் என்பது இவர்களின் முதல் ஆதாரமாகும்.


பாக்கியமுள்ள இரவு என்று அல்லாஹ் ஒரு இரவைக் குறிப்பிட்டால் நிச்சயம் அது பாக்கியமிக்கது தான். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை, ஆனால் பாக்கியமிக்க இரவு என்பது ஷஅபான் மாதத்தின் 15 ஆம் இரவு என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பாக்கியமிக்க இரவு என்று அல்லாஹ் கூறும் போது அதற்கான காரணத்தையும் சேர்த்தே சொல்கிறான்.


இந்த இரவில் திருக்குர்ஆனை நாம் இறக்கினோம் என்பது தான் அந்தக் காரணமாகும். எந்த இரவில் குர்ஆன் அருளப்பட்டதோ அந்த இரவைத் தான் இவ்வசனம் குறிப்பிடுகிறது. எந்த இரவில் குர்ஆன் அருளப்பட்டது என்பதை நாம் திருக்குர்ஆனில் தேடிப் பார்த்தால் அந்த இரவு ரமலான் மாதத்தில் உள்ள லைலத்துல் கத்ர் இரவு என்று அறிந்து கொள்ளலாம்.


 ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் வழிகாட்டியாகவும் நேர்வழி மற்றும் (உண்மை, பொய்யைப்) பிரித்தறிவிப்பதின் தெளிவான சான்றுகளைக் கொண்டாதாகவும் இந்தக் குர்ஆன் அருளப்பட்டது. 


 திருக்குர்ஆன் 2:185


இ(வ் வேதத்தை) மதிப்புமிக்க இரவில் இறக்கினோம்


 திருக்குர்ஆன் 97:1


அந்த இரவு ரமலான் மாதத்தில் உள்ள லைலத்துல் கத்ர் இரவு தான் என்று இவ்வசனங்கள் மூலம் அல்லாஹ் விளக்கம் கொடுத்து விட்டான். பாக்கியமிக்க இரவு என்பது ரமலான் மாதத்தில் உள்ள லைத்துல் கத்ரைத் தான் குறிக்கிறதே தவிர ஷஃபான் மாதத்தின் 15 ஆம் இரவு அல்ல என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது. எனவே பராஅத் இரவுக்கும் இவர்கள் காட்டும் வசனத்திற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை.


இரண்டாம் ஆதாரம்: ஷஃபான் மாதத்தில் பாதி இரவு வந்து விட்டால் அதில் நீங்கள் நின்று வணங்குங்கள். அந்தப் பகலில் நோன்பு பிடியுங்கள். அந்த இரவில் இறைவன் வானத்திலிருந்து இறங்கி வந்து, பாவமன்னிப்புத் தேடுவோர் உண்டா? நான் அவர்களின் பாவங்களை மன்னிக்கிறேன். சோதனைக்கு ஆளானோர் உண்டா? நான் அவர்களின் துன்பங்களைப் போக்குகின்றேன். என்னிடம் உணவு கேட்பவர் உண்டா? நான் அவர்களுக்கு உணவளிக்கிறேன் என்று காலை வரை கூறிக் கொண்டேயிருக்கிறான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர் : அலீ (ரலி) நூல்.இப்னுமாஜா


இப்னுமாஜாவில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமான செய்தி அல்ல. இப்னு அபீ ஸப்ரா என்பவர் வழியாக இச்செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இவரது இயற்பெயர் அபு பக்ர்  பின் அப்துல்லாஹ் பின் முஹம்மது அபி புஸ்ரா” ஆகும்.


இவர் ஹதீஸ்கள் என்ற பெயரால் இட்டுக்கட்டிக் கூறுபவர் என அஹ்மத் பின் ஹம்பல் அவர்கள் கூறியுள்ளார்கள். புகாரி அவர்கள் இந்த அறிவிப்பாளரை பலவீனமானவர் என்று கூறியுள்ளார்கள். அபூபக்கர் என்பார் பலவீனமானவர் என்று நஸாயி அவர்கள் அல்லுஅஃபாஉ வல் வல்மத்ருகீன் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். இவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டுபவர் எனவே இந்த ஹதீஸ் பொய்யான ஹதீஸாகும்.


மூன்றாம் ஆதாரம்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் ஒரு நாள் இரவு, படுக்கையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் காணாமல் வெளியே தேடி வந்தார்கள். அப்போது அவர்கள் பகீவு என்ற இடத்தில் நின்று கொண்டிருந்தார்கள். ஷஅபான் மாதம் 15 ஆம் இரவில் அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி கலப் கோத்திரத்தாரின் ஆட்டு ரோமத்தின் எண்ணிக்கை அளவுக்கு (பாவங்களை) மன்னிக்கின்றான் என்று அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்: திர்மிதி


இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது அல்ல என்பதை இதைப் பதிவு செய்த திர்மிதீ அவர்களே விளக்கியுள்ளார்கள்.


இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான யஹ்யா பின் அபீ கஸீர் என்பார் உர்வா என்பார் வழியாக அறிவிப்பதாக இதில் கூறப்பட்டுள்ளது. ஆனால் யஹ்யா பின் அபீ கஸீர் என்பார் உர்வாவிடம் எதையும் செவியுற்றதில்லை என்று புகாரி இமாம் கூறுகிறார். மேலும் ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் என்பார் இதை யஹ்யா பின் அபீ கஸீர் வழியாக அறிவிப்பதாக இதில் கூறப்பட்டுள்ளது. ஆனால் ஹஜ்ஜாஜ் என்பார் யஹ்யா பின் அபீ கஸீரிடம் எதையும் செவியுறவில்லை. எனவே இது பலவீனமான ஹதீஸ் என்று புகாரி இமாம் கூறுகிறார். இந்த விபரத்தை இந்த ஹதீஸின் இறுதியில் திர்மிதி அவர்களே குறிப்பிட்டுள்ளார்கள். எனவே இதையும் ஆதாரமாகக் கொள்ள முடியாது.


நான்காவது ஆதாரம்: ரமலான் மாதம் நடுப்பகுதி 15ஆம் இரவிலும், ஷஃபான் மாதம் நடுப்பகுதி 15ஆம் இரவிலும் இக்லாஸ் எனும் அத்தியாயத்தை 1000 தடவை ஓதி எவர் 100 ரக்அத்கள் தொழுகின்றாரோ அவருக்கு சொர்க்கத்தைக் கொண்டு நற்செய்தி சொல்லப்படும் வரை அவர் மரணிக்க மாட்டார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 


அறிவிப்பவர் : முஹம்மத் பின் அலீ, நூல் : ஃபலாயிலு ரமலான் – இப்னு அபித் துன்யா


முஹம்மத் பின்அலீ என்பவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்தவர் அல்ல.  எனவே இச்செய்தியும் பலவீனமான செய்தியாகும். மேலும் பராஅத் இரவு குறித்து எந்த ஆதாரப்பூர்வமான செய்தியும் இல்லை. 


மேலும் இந்த இரவில் மூன்று தடவை யாஸீன் அத்தியாயம் ஓத வேண்டும்; முதல் யாஸீன் பாவமன்னிப்பிற்காகவும், இரண்டாவது யாஸீன் மரணித்தவர்களுக்கு நன்மை சேர்க்கவும், மூன்றாவது யாஸீன் நீண்ட ஆயுளுக்காகவும் என்று ஓதுகின்றனர். இப்படி ஓத வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. இது போலி ஆலிம்கள் வீடுகளுக்குப் போய் சம்பாதிப்பதற்காக உருவாக்கிய பொய் வணக்கமாகும். ஷஅபான் மாதம் 15 ஆம் இரவில் நோன்பு நோற்பதும் பித்அத்தாகும்.


பராஅத்தும் மத்ஹபுகளும்


மத்ஹப் இமாம்களை பின்பற்றுகிறோம் என்று கூறிக்கொள்வோர், அந்த மத்ஹப் இமாம்களே ஷபே பராஅத் சம்பந்தமாக கடுமையாக விமர்சித்துள்ளதை சிந்திக்கவேண்டும். 


இமாம் ஷாஃபியீ அவர்கள்


ﻭﻣﻦ اﻟﺒﺪﻉ اﻟﻤﺬﻣﻮﻣﺔ اﻟﺘﻲ ﻳﺄﺛﻢ ﻓﺎﻋﻠﻬﺎ ﻭﻳﺠﺐ ﻋﻠﻰ ﻭﻻﺓ اﻷﻣﺮ ﻣﻨﻊ ﻓﺎﻋﻠﻬﺎ: ﺻﻼﺓ اﻟﺮﻏﺎﺋﺐ اﺛﻨﺘﺎ ﻋﺸﺮﺓ ﺭﻛﻌﺔ ﺑﻴﻦ اﻟﻌﺸﺎءﻳﻦ ﻟﻴﻠﺔ ﺃﻭﻝ ﺟﻤﻌﺔ ﻣﻦ ﺭﺟﺐ.

ﻭﺻﻼﺓ ﻟﻴﻠﺔ ﻧﺼﻒ ﺷﻌﺒﺎﻥ ﻣﺎﺋﺔ ﺭﻛﻌﺔ


ரஜப் மாதத்தின் முதல் ஜுமுஆ வின் இரவில் மஃரிப் இஷாத் தொழுகைக்கு இடையில் ஸலாத்துர் ரகாயிப் என்ற 12 ரக்அத்கள் தொழுவதும் ஷஃபான் 15 ஆம் இரவில் 100ரக்அத்கள் தொழுவதும் பழிக்கப்பட்ட மார்க்கத்தில் இல்லாத பித்அத்களாகும். அதனை  செய்பவர் பாவி. அதனை தடுப்பது ஆட்சியாளர்கள் மீது கடமையாகும்.


(நூல்: இஆனதுத் தாலிபீன் 1பாகம் :312பக்கம்)


فائدة : أما الصلاة المعروفة ليلة الرغائب وليلة شعبان يوم عاشوراء بدعة قبيحة وأحاديثها موضوعة 

(ரஜப்) மாதத்தின்) ரகாயிப் இரவு ஷஃபான் இரவு ஆஷுரா நாள் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டு தொழுகைகளை தொழுவது மிக மோசமான பித்அத்தாகும் 


(நூல் : ஃபத்ஹுல் முயீன் பாகம்1 : பக்கம்270


ஹனஃபீ மத்ஹப்


اسراج السراج الكثيرة في السكك والأسواق ليلة البراءة بدعة وكذا في المساجد

 

பராஅத் இரவில் தெருக்களிலும் கடைவீதிகளிலும் அவ்வாறே பள்ளிவாசல்களிலும் அதிகமாக  விளக்குகளை எரிப்பது மார்க்கத்தில் இல்லாத பித்அத்தாகும்.


(நூல்: அல் பஹ்ருர் ராயிக் பாகம்5: பக்கம் 232)


இவ்வாறு இமாம்களே  அன்றைக்கே இது போன்ற பித்அத்களை கடுமையாக கண்டித்துள்ளனர். என்பதை இதிலிருந்து அறியலாம். மேலும் மக்களை மத்ஹபை பின்பற்ற வேண்டும் என எதைக்கொண்டு போதிக்கின்றார்களோ, அந்த மத்ஹப் கிரந்தங்களில் தான் நாங்கள் எடுத்துக்காட்டிய மேற்கண்ட கருத்துக்கள் இடம்பெற்றுள்ளது.


நபிகளாரின் எச்சரிக்கை!


நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை அதில் ஒருவர் புதிதாக உருவாக்குகிறாரோ அது ரத்து செய்யப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி 2697


நமது அனுமதியில்லாமல் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) – நூல் : முஸ்லிம்


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த எச்சரிக்கைக்கு மதிப்பளித்து அவர்கள் காட்டித்தராமால் பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட பராஅத் வணக்கங்களை விட்டொழிப்போமாக!



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,

மாநில தலைமையகம்.